Monday, September 30, 2013

உயர்ந்த நிலைக்கு வழிவகுக்கும் செயல் முறைகள்!



இன்றைய மாறிவரும் தொழில்முறையில், உலகநாடுகளின் போட்டியைச் சமாளிக்க நாம் ஒவ்வொருவரும் புதிய வழிமுறை, கூரிய  சிந்தனை ஆகியவற்றை கைக் கொள்ள வேண்டும்.

நம்முடைய வீடோ, அலுவலகமோ, எதுவானாலும் தூய்மை இல்லாமல், ஒழுங்குமுறை இல்லாமல் இருந்தால் நிச்சயமாய் நம்மால் உயர்ந்த பலனைப் பெற முடியாது. மேலும் பலனைத் தராத உழைப்பு நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், வணிகத்திலும் தோல்வி அடைய வைத்து  விடும்.

உலகம் மாறுகின்ற வேகத்தில்; ஒவ்வொருவரும் முன்னேற்ற முறைகளைக் கற்றுணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
இருக்கும் பொருட்களைக் கொண்டு நம் அன்றாட வாழ்வில்  வெற்றி பெறுவதற்கு, நாம் ஜப்பானிய முறைகளையும், மற்றவைகளையும் பயன்படுத்துவோம்.

நமது அன்றாடப் பிரச்சனைகள்!

நாம் எல்லோரும் பரவலாய் வீட்டிலோ, அலுவலகத்திலோ, தொழில் செய்யும் இடத்திலோ எதிர்கொள்ளும்  சிக்கல் என்னவென்றால், தேவையானவற்றைத்  தேவையான நேரத்தில் கிடைக்கப்  பெறாமல் இருப்பது . இதனால் நாம்: அதை தேடத் தொடங்கி; காலத்தை வீணடிக்கிறோம். இதன் காரணமாக ஏற்படும்  நேர இழப்புகளும், ஏமாற்றங்களும், நமக்கு ஏற்படுத்துவது   கோபம், கவலை, குழப்பம், பதைபதைப்பு மற்றும் பல. இதனால் மன அமைதி இழந்து தொழிலை நேசிப்பதற்குப்  பதில் மனதளவில் வெறுக்க தொடங்குகிறோம்.


நாம் பொருட்களைத் தேடும் முயற்சியிலேயே காலத்தை வீணடிக்கிறோம் என்று நீங்கள் நிச்சயமாய் ஒத்துகொள்வீர்கள். இதற்கு  அடிப்படையான மூலப் பிரச்னை என்னவென்றால், நம் அன்றாட வாழ்கையில் சரியான அடிப்படை செயல்முறைகளில் சரியான ஒழுங்குமுறை இல்லாமல் இருப்பதே. 


தினமும் என்ன செய்கிறோம்  நாம்?

கால் பகுதி நேரத்தைத் தேடுதலில் செலவிடுகிறோம்.

எதனால் தேடுகிறோம்?  


Ø  தேவையற்றைகளோடு கலந்து வைத்தல்.

Ø  கழிவுகளோடு சேர்த்து வைத்தல்.

Ø  வைத்த இடத்தில்  இல்லாமல் இருத்தல்.

Ø  நிலையான இடத்தை ஒதுக்காமல் இருத்தல்.

Ø  அடையாளம்  பெயர் இல்லாமல் வைத்தல்.

Ø  காலியாகும்வரை  தெரியாத நிலை.

Ø  இருப்பு எவ்வளவு என  அறிய முடியாமை.

Ø  அடையாளம் காணமுடியாத தூரம். 

Ø  பார்வையில்  படாமல் வைத்தல்.

Ø  குறிப்பிட்ட இடத்தில் வைக்காதிருத்தல்.

Ø  பெயர் பலகை இல்லாதிருத்தல். 

Ø  ஒழுங்குமுறை இல்லாது வைத்தல்.


ஆகவே,  நாம் உடனே செய்ய வேண்டியது பயனற்றப் பொருட்களை பணியிடத்திலிருந்து அகற்றுதலாகும். "பழைமையான பொருட்களைக் காக்க வேண்டியது அருங்காட்சியகத்திலேயேயன்றி நாம் அன்றாடம் வேலைசெய்யும் இடத்தில் அல்ல"

ஒழுக்கம் உந்தும் ஆக்கம்:

ü  பொருட்களைச் சீராக அமைதல்.

ü  எப்பொழுதும் தேவைபடுபவைகளை அருகில், எளிதில் எடுக்குமாறு வைத்தல்.

ü  அவ்வப்பொழுது தேவைப்படுபவைகளை  சிறிது துரத்தில் வைத்தல். 

ü  எப்பொழுதாவது தேவைப்படுபவைகளை சற்று தொலைவில் தள்ளிவைத்தல்.  

ü  என்றோ தேவைப்படுபவைகளை கிடங்குகளில், பரண்களில் வைத்தல். 

ü  தேவை, ஆனால் எப்பொழுது  தேவை எனத் தெரியாது என்றவைகளில் அத்யாவசியமான  இருப்பை விட்டு விட்டு மீதியை விற்று  முதலாக்கி கொள்ளலாம்.


 இது  நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை  எளிமையாய்க் கண்டுபிடிக்க, கையாளச் செய்ய மிகவும் உதவியாய்  இருக்கும்.


உயர்ந்த நிலையை அடைய விதிமுறைகளை உருவாக்கவேண்டும்.

நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அதை வழக்கமாகச் செய்தால்  தொடர் முன்னேற்றம் ஏற்படும். நல்ல வழிகாட்டுதலை வரவேற்று பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம், இது மற்றவர்களையும்  ஈர்க்கும்.


செயல் முறைகளை தணிக்கை மூலம் அளவிட்டு, மேலும் முன்னெற்ற வழிவகுத்தலால் குழுவாக ஒருமனதாக செயல்படும் பண்பாட்டை உருவாக்கலாம்.


தொடர்ந்து தொய்வில்லாமல், நிறுவனத்தில்  பயின்ற நல் ஒழுக்கத்தை, பொது இடங்களிலும், வீட்டிலும் கடைபிடிப்பதால் ஒட்டு மொத்த  சமுதாய வளர்ச்சியையும் உன்னதமான சுற்றுப்புறச் சூழலையும் உருவாக்கமுடியும்.


நாம் பணியிடத்தை எப்பொழுதும் தூய்மையாய் வைத்திருப்பதற்கு நம்மை வழிநடத்தும், சில கொள்கைகள், சட்ட திட்டங்கள் முதலானவற்றை நாம் மேற்கொண்டு வந்தாலே தொழிற்சாலையை  நேசிக்கும் சூழ்நிலையை எற்படுத்தி பணித்  திறனையும் அதிகரிக்க முடியும். நீங்கள் மாறாவிட்டால் எதுவும் மாறாது .


மாற்றம் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சி, மாற்ற முடியுமா? முடியும் நம்மாலும் முடியும். நன்றி. 

 


ஜப்பானிய முறையான 5S பற்றி நாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்..

Saturday, September 28, 2013

பணியும் மனநிறைவும்!


பணியில் ஒவ்வொரு பணியாளருக்கும் முழு ஈடுபாடு இருக்க வேண்டும்.  நீங்கள் பணி செய்யும் நிறுவனம்  "என்னுடைய நிறுவனம்"  "இந்த நிறுவனத்தில் நான் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறேன்" என்ற உரிமை ("OWNERSHIP")  அனைவருக்கும் வரவேண்டும் என்றால்,  நீங்கள் ஒவ்வொருவரும்;  பணி  செய்வதில் திருப்தி அடையவேண்டும்.

பணிசெய்யும்போது  உங்களுடைய  ஈடுபாடு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ  அந்த அளவுக்கு உங்களுடைய பணியில் மனநிறைவும், திருப்தியும் அதிகரிக்கும்.   உங்களுடைய பணியில் முழு ஈடுபாட்டுடன் நீங்கள்  பணி  செய்வதற்கு இந்த சுயநெறிப் பணிகுழு முதன்மையானதாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல வழிகாட்டுதலாகவும்  இருக்கும்.

வாடிக்கையாளர்கள் மனநிறைவு அடைய, உங்களுடைய பணியை நீங்களே  திட்டமிட்டு அதை அன்றே முடிப்பதற்கு முயற்சி செய்து முழுமனதுடன் ஈடுபட்டால், உங்களுடைய பணி  நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக ஒரு காரணமாக அமையும்.  உங்களுடைய விடா முயற்சியும், கூட்டு முயற்சியும் ஒன்று சேர்ந்து பணியில் உயர்வை (EXCELLENCE AT WORK) அடைய வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.  ஆக, நாம் எந்த ஒரு சிறு செயலைச் செய்தாலும் அதில் உயர்வானதொரு (EXCELLENCE) இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும், குறிக்கோளுடனும் பணி  செய்ய வேண்டும்.

நன்றி. ஸ்ரீவத்ஸ் ராம், வீல்ஸ் இந்தியா, சுயநெறிப்  பணிக்குழு



Thursday, February 07, 2013

பாத ஆரோக்கியம்!


  • பாத ஆரோக்கியம்

    பொதுவான தகவல்

    • நான் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? 
       பாத கவனிப்பு என்பது நீங்கள் கட்டுப்படுத்தக் கூடியது. பாதத்தில் சிவந்திருத்தல், வீக்கம், வடிவத்தில் மாற்றம், தோலில் வறட்சி அல்லது வெடிப்பு, புண்கள், கொப்புளங்கள் அல்லது வேறெந்த மாற்றத்தின் அறிகுறிகள் ஏதும் உள்ளதா என்று தினமும் உங்கள் பாதங்களை சோதித்துப் பாருங்கள். பாதத்தில் எப்படி உணர்கிறீர்கள் என்பதிலும் கவனம் செலுத்துங்கள் - அவை மரத்துள்ளனவா, வலிக்கின்றதா அல்லது விறுத்துக்கொள்கிறதா?உங்கள் பாதங்கள் அல்லது கால்களில் அடிக்கடி தசைப்பிசகு ஏற்படுகிறதா?இவற்றில் எந்த அறிகுறி இருந்தாலும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது, சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க இயன்ற அளவுக்கு விரைவான கவனம் தேவைப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
      வீட்டில் பாதுகாப்பான காலணிகளை அணிந்து கொள்வது போன்ற நல்ல வழக்கங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். பாதங்களில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் வீட்டுக்கு உள்ளேதான் ஏற்படுகின்றன, பாதுகாப்பு அளிக்கும் காலணிகளை அணிவதன் மூலம் இதைத் தவிர்க்க முடியும். விரல் பகுதி மூடப்பட்ட ஷூக்கள், உங்களால் உணர முடியாத வெட்டுக்காயம் அல்லது சிராய்ப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.
    • நியூரோபதி என்றால் என்ன? 
      சர்க்கரை நோயுடன் வாழ்பவர்களுக்கு நியூரோபதி என்னும் நிலைமை உருவாகும் ஆபத்து அதிகம், அதாவது நரம்பு உணர்ச்சி குறைதல், குறிப்பாத பாதங்களில். அதாவது, வெப்பம் அல்லது குளிர்ச்சி, வெட்டுகள் அல்லது ஷூக்கள் பாதங்களை உரசுதல் போன்றவற்றை ஒருவர் உணர முடியாமல் போகலாம் என்று பொருள். நாளாக நாளாக, சிகிச்சை அளிக்கப்படாத சிறு காயங்கள் பெரும் சிக்கல்களுக்கு, அல்லது உறுப்பு நீக்கத்துக்கும்கூட இட்டுச் செல்லலாம். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும்/அல்லது அதிக இரத்த அழுத்தமும் அதிக கொழுப்பு அளவுகளும் உள்ளவர்கள் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை உள்ளவர்கள் மத்தியில் பொதுவாக டயபடிக் நியூரோபதி இருக்கும் வாய்ப்பு அதிகம்.
    • நான் யாரை அழைப்பது? 
      குடும்ப மருத்துவர் உங்கள் ஆரோக்கியம் பற்றி பொதுவாக அறிந்திருக்கலாம், ஆனால் பாதத்தைக் கவனிக்கும் சிறப்புப் பயிற்சி எல்லா மருத்துவர்களுக்கும் இருக்காது. கிரோபோடிஸ்ட்ஸ் மற்றும் பூடியாட்ரிஸ்ட்ஸ் என்போர் பாத கவனிப்பில் சிறப்புக்கவனம் செலுத்துபவர்கள். பெடார்திஸ்ட்ஸ் என்போர் ஆர்தோடிக்ஸ், காலணிகள் மற்றும் காலணி திருத்தங்களில் சிறந்து விளங்குபவர்கள். பாத கவனிப்பு செவிலியர்கள், உங்கள் பாதங்களைக் கவனிக்க சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். மேலும் தகவலுக்கு கீழே உள்ள கேள்விகளைப் பார்க்கவும்.
    • கிரோபோடிஸ்ட்ஸ் மற்றும் பூடியாட்ரிஸ்ட்ஸ் என்போர் யார்? 
      கிரோபோடிஸ்ட்ஸ் மற்றும் பூடியாட்ரிஸ்ட்ஸ் என்போர், சிகிச்சை, அறுவை சிகிச்சை அல்லது தேவைப்படும் இதர சிகிச்சையின்மூலம் பாதம் மற்றும் கணுக்கால் பிரச்சினைகளைக் கண்டறிந்து சிகிச்சை தருவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர்கள். நோயாளியின் உடல்நலம், நடமாட்டம், வசதி மற்றும் தனித்தியங்குதல் ஆகியவற்றில் பாத அல்லது கணுக்கால் பிரச்சினைகள் பாதகமான விளைவுகள் ஏற்படுத்துவதைக் குறைப்பதே இவர்களின் இலக்காகும்.
    • பெடார்திஸ்ட்ஸ் என்போர் யார்? 
      பெடார்திஸ்ட்ஸ் என்போர், காலின் கீழ்பகுதி மற்றும் பாதத்தின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவது, காலணிகளைத் திருத்துவது மற்றும் பொருந்தும் ஷூக்களை உருவாக்குவதில் சிறப்புக்கவனம் செலுத்துபவர்கள். ஷூக்கள் தோலுடன் உரசும் ஆபத்தைக் குறைக்க, சரியாகப் பொருந்தும் ஷூக்களை அணிவது சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக முக்கியமானது. உங்கள் தேவைகளுக்கேற்ற வடிவம், வகை மற்றும் அளவில் ஷூக்களை தேர்வு செய்ய பெடார்திஸ்ட்ஸ் உங்களுக்கு உதவ இயலும், அத்துடன் உங்கள் பாதத்தைக் கவனிக்கவும் இயலும்.
    • என் குடும்ப மருத்துவரிடம் சென்றால் போதாதா? 
      ஒரு குடும்ப மருத்துவர் உங்கள் பொது ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் வெவ்வேறு சிறப்பு மருத்துவர்களுக்குப் பரிந்துரைக்கவும் இயலும். சில குடும்ப மருத்துவர்கள் பாத கவனிப்பிலும் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கலாம்;ஆனால் பெரும்பாலோர் அப்படி இல்லை. இயன்ற அளவுக்கு சிறந்த பாத கவனிப்பைப் பெற, பாத ஆரோக்கியம் மற்றும் பாதப் பிரச்சினைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆரோக்கிய கவனிப்பு வல்லுநரிடம் செல்வதுதான் நல்லது. உங்கள் குடும்ப மருத்துவரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் உங்கள் பாத ஆரோக்கியம் பொதுவில் எப்படி இருக்கிறது என்று அறிய பாதங்களை சோதிக்கச் சொல்லுங்கள், கவனிப்பு தேவைப்பட்டால் பொருத்தமான வழிகளைப் பரிந்துரைக்குமாறு கேளுங்கள்.
  • உங்கள் ஆரோக்கிய கவனிப்புக் குழுவில் யார் யார் இருக்கக்கூடும்:

    • சர்க்கரை நோய் கல்வியாளர் 
      உங்கள் சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதையும், இயன்ற அளவுக்கு ஆரோக்கியமாக இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ள உதவக்கூடிய பொதுத் தகவல் மற்றும் கல்விச் சாதனங்களை சர்க்கரை நோய் கல்வியாளர்கள் வழங்குவார்கள்.
    • பதிவுபெற்ற உணவுமுறை வல்லுநர்/ ஊட்டச்சத்து வல்லுநர் 
      எந்த உணவு ஆரோக்கிய உணவு என்று கண்டறிவது சிரமமாக இருக்கலாம் என்பதால், பதிவுபெற்ற உணவுமுறை வல்லுநர்கள் உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் இலக்குகளுக்கேற்ப உணவுத் திட்டத்தை தயாரித்துத் தருவார்கள்.
    • எண்டோகிரைனாலஜிஸ்ட் 
      எண்டோகிரைனாலஜிஸ்ட்ஸ் என்பவர்கள் சர்க்கரை நோய், ஹைபோதைராய்டிஸம் போன்ற எண்டோகிரைன் அமைப்புக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துபவர்கள். பெரும்பாலான பகுதிகள் மற்றும் பிராந்தியங்களில் எண்டோகிரைனாலஜிஸ்ட் ஒருவரை சந்திக்க நீங்கள் பரிந்துரை பெற்றிருக்க வேண்டும்.
    • வாஸ்குலர் சர்ஜன் 
      வாஸ்குலர் சர்ஜன் என்பவர், இரத்த ஓட்டத்தை பாதிக்கும் பிரச்சினைகளைக் கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் பயிற்சி பெற்றவர்கள். கால்களுக்கும் பாதங்களுக்கும் இரத்த ஓட்டத்தை சர்க்கரை நோய் பாதிக்கக்கூடும், இதனால் காயங்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படக்கூடும், வாஸ்குலர் சர்ஜன்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முயற்சி செய்வார்கள். பெரும்பாலான பகுதிகள் மற்றும் பிராந்தியங்களில் வாஸ்குலர் சர்ஜன் ஒருவரை சந்திக்க நீங்கள் பரிந்துரை பெற்றிருக்க வேண்டும்.
    • நியூராலஜிஸ்ட் 
      நரம்பு அமைப்பில் ஏற்படக்கூடிய சிக்கல்களை நரம்பியல் வல்லுநர்கள் கண்டறிகிறார்கள். சர்க்கரை நோய் இருப்பவர்களில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் பேருக்கு ஏதோ ஒரு வகையில் நரம்பு சேதம் இருக்கும், குறைந்தது 25 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மத்தியில் இதன் விகிதம் மிகுதியாக இருக்கும்.
  • ஆரோக்கியம் தொடர்பான சொற்கள்:

    • பிளான்ட்டர் வார்ட்ஸ் :
      பிளான்ட்டர் வார்ட் என்பது, நீச்சல் குளம், ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் காணப்படும் கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமி, தோலில் காய்ப்பு போன்ற லீஸனை உருவாக்கக்கூடும். அது மோசமடைவதை அல்லது பரவுவதைத் தடுக்க பூமிஸ் கல்லில் தேய்ப்பது அல்லது இதர பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது என்பது முக்கியம். பிளான்ட்டர் வார்ட்டுக்கு சிகிச்சை பெற தயவுசெய்து ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர் ஒருவரைப் பார்க்கவும்.
    • கொப்புளம் :
      கொப்புளம் என்பது பொதுவாக அழுத்தமாகத் தேய்த்தல், சூடுபடுதல், உறைதல், இரசாயனம் படுதல் அல்லது தொற்றின் காரணமாக தோலின் மேல்பகுதிக்கு அருகே ஏற்படுகிற திரவம் நிரம்பிய குமிழ் அல்லது பகுதி. பெரும்பாலான கொப்புளங்களில் தெளிவான திரவம் இருக்கும்;ஆனாலும், சிலவற்றில் இரத்தம் அல்லது சீழும் இருக்கலாம்.
    • கால்லஸ்: 
      கால்லஸ் என்பது தோலின் கடினப்பட்ட பகுதிகள்,  தொடர்ந்த உராய்வு, அழுத்தம் அல்லது இதர எரிச்சல்களின் விளைவாக தடித்தும் இறுகியும் தோல் காய்த்துப்போவது. கால்லஸ் என்பது பொதுவாக தீங்கற்றது, ஆனால் சில நேரங்களில் தோல் புண் அல்லது தொற்று போன்ற வேறு பிரச்சினைகளுக்கு வழி ஏற்படுத்தலாம். லீஸன் ஏதும் இருந்தால் அதை நீக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் ஒரு கிரோபோடிஸ்ட் அல்லது பூடியாட்ரிஸ்ட் அதைப் பார்க்க வேண்டும்.
  • பாத கவனிப்பு:

    • என் நகங்களை நானே வெட்டிக்கொள்வதை எப்போது நிறுத்த வேண்டும்? 
      சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில நேரங்களில் தமது பாதங்களில் உணர்ச்சியை இழந்து விடுவதுண்டு. உங்கள் விஷயத்தில் இப்படி இருந்தால், நகங்களை நீங்களாகவே வெட்டும்போது அறியாத்தனமாக வெட்டிக் கொள்ளவோ குத்திக் கொள்ளவோ கூடும், அதை நீங்கள் உணராமல் இருக்கக்கூடும். உங்கள் பாதத்தில் எந்தவொருஉணர்ச்சியை நீங்கள் இழந்திருந்தாலும், பயிற்சி பெற்ற நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது ஆரோக்கிய கவனிப்பு வல்லுநரைக் கொண்டு உங்கள் நகங்களை வெட்டச் செய்யுங்கள். 
    • என் பாதங்களை நானே சோதிக்க இயலவில்லை என்றால் என்ன செய்வது? 
      சோதிப்பதற்காக பாதத்தின் அளவுக்கு குனியவோ அல்லது பாதத்தை மேலே தூக்கவோ உங்களால் இயலாது எனில், உடையாத கண்ணாடியை தரையில் வைத்து பாதத்தின் அடிப்பாகத்தைப் பார்க்கலாம். இதுவும் உதவாவிட்டால், நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது கவனிப்பாளர் ஒருவரிடம் உங்கள் பாதத்தை தினமும் சோதிக்கும்படி கேளுங்கள்.
    • என் பாதங்களை எவ்வாறு சோதிப்பது? 
       பாதங்களை சோதிக்க, பின்வரும் ஏதேனும் தெரிகிறதா என்று பாதங்களின் மேற்புறம் கீழ்ப்புறம் என இரண்டு பக்கமும் பார்க்கவும்:
      • சிவந்திருத்தல்
      • வடிவத்தில் மாற்றம்
      • வறட்சி அல்லது தோலில் வெடிப்பு
      • புண்கள்
      • கொப்புளங்கள்
      • வெட்டுகள் அல்லது சிராய்ப்புகள்
      • கால்விரல் நகங்கள் உட்புறமாக வளர்தல்
      • வேறேதும் மாற்றம்
    • என் பாதங்களை சோதிப்பது ஏன் முக்கியம்? 
      உங்கள் பாதங்களில் மாற்றத்தை கவனித்து விரைவில் உதவியைத் தேடினீர்கள் என்றால், கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்பே பிரச்சினைக்கு வெற்றிகரமான சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நியூரோபதி என்னும் நிலை உருவாகும் ஆபத்து அதிகம், அதனால் நரம்புகளில், குறிப்பாக பாதங்களில் உணரும் திறன் இழப்பு ஏற்படும். பாதத்தில் உணர்வு இல்லாது போனால், உங்கள் பாதத்திற்கு காயம் ஏற்பட்டு, நீங்கள் அதை அறியாமல் போகலாம். சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால், இந்தக் காயங்கள் பெரும் சிக்கல்களுக்கு, ஒருவேளை உறுப்பு நீக்கத்துக்கு இட்டுச்செல்லலாம். இந்தப் பிரச்சினைகளைக் கவனிப்பதும் இயன்ற அளவுக்கு விரைவாக சிகிச்சை தருவதும் உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கலாம். 
    • என் பாதங்களில் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தை நான் எப்படி குறைக்கலாம்? 
      உங்கள் பாதங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் செய்யக்கூடியவை பலவும் உண்டு. 
      • என் இரத்த குளுக்கோஸ் அளவுகளை கட்டுப்படுத்துவேன்
      • என் பாதங்களை என்னால் எட்ட முடியவில்லை அல்லது பாதங்களில் உணர்ச்சியில்லை என்றால் ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர் ஒருவரைக் கொண்டு கால்விரல் நகங்களை வெட்டவும், தோலை கவனிக்கவும் செய்வேன்
      • என் ஷூக்களை தொழில்முறைப்படி பொருந்தும் வகையில் செய்வேன்
      • புகைப்பதை கைவிடுவேன்
      • என் ஆரோக்கிய கவனிப்புப் பணியாளர் கூறியபடி வழக்கமாக உடற்பயிற்சி செய்வதைத் தொடங்குவேன்
      • என் பாதங்களை தினமும் கழுவி நன்றாக உலர்த்துவேன்
      • ஷூக்களை அணியும் முன் அவற்றை உதறுவேன்
      • வீட்டுக்குள்ளும் வெளியிலும் எப்போதும் ஷூக்களை அணிந்திருப்பேன்
      • விரல் பகுதி மூடப்பட்ட ஷூக்கள் காயத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பதால் அவற்றையே வாங்குவேன்
      • நாளின் பின்பாதி நேரத்தில் கால்கள் வீங்கியிருக்கும் என்பதால் அந்த நேரத்தில்தான் ஷூக்களை வாங்குவேன்
      • தினமும் காலுறைகளை மாற்றுவேன்
      உங்கள் பாதங்களில் எப்படி உணர்ச்சி இருக்கிறது என்பதிலும் கவனம் செலுத்துங்கள் - அவை மரத்துப்போனதாக, வலிப்பதாக அல்லது விறுத்துப்போனதாக உள்ளனவா?இந்த அறிகுறிகளில் எது இருந்தாலும், சிக்கல்களின் ஆபத்தைக் குறைக்க இயன்ற அளவுக்கு விரைவாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு பிரச்சினை இருக்கிறது என்று பொருள்.
  • காலணிகள்:

    • ஷூக்கள் வசதியாகவும் மென்மையாகவும் இருப்பது மட்டும் ஏன் போதாது? 
      பாதத்தில் உள்ள நரம்புகள் மாற்றம் அடைவதால், அவை அனுப்பும் சேதிகளும் எப்போதும் சரியாக இருக்காது. அதாவது, ஷூக்கள் நெருக்கமாக இருக்கும்போதுகூட அவை வசதியானவையாகத் தோன்றலாம். உங்கள் பாதத்தில் உணர்விழப்பு ஏதும் இருந்தால், தொழில்முறையாளரைக் கொண்டு உங்கள் காலணிகளை பொருந்தச் செய்வது காலணி நன்றாகப் பொருந்துவதற்கு மிக முக்கியம்.
    • விரல்பகுதி திறந்த ஷூக்களை நான் ஏன் அணியக்கூடாது? 
      சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி நரம்பில் உணர்ச்சி இழப்பு ஏற்படும், இதனால் அவர்கள் உணராமலே பாதத்தில் வெட்டுக்காயமோ, சிராய்ப்போ அல்லது உராய்வோ பெறும் வாய்ப்பு அதிகம். சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால், இந்தக் காயம் மோசமடையலாம், சிக்கல்களுக்கும், ஒருவேளை உறுப்பு நீக்கத்துக்கும்கூட இது இட்டுச் செல்லலாம்.
    • என் ஷூக்கள் சரியாகப் பொருந்துகிறதா என்ற எப்படி அறிவது? 
      பாதம் சிவந்திருத்தல் என்பது, உங்கள் ஷூக்கள் சரியாகப் பொருந்தவில்லை, தோலுடன் உரசுகின்றன என்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். உங்கள் ஷூக்கள் சரியாகப் பொருந்தியிருப்பதை உறுதி செய்ய ஒரு பெடார்திஸ்டைக் கொண்டும் காலை அளவெடுக்கச் செய்யலாம்.
  • இப்படி நிகழ்ந்தால் நான் என்ன செய்வது... ?

    • என் பாதத்தை உணர முடியாவிட்டால் நான் என்ன செய்வது? 
      உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை கண்காணித்து கட்டுப்படுத்துங்கள். அறியாமல் உங்களுக்கு நீங்களே காயப்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க, தொழில்முறையாளரைக் கொண்டு பாதங்களின் நகங்கள் மற்றும் தோலை கவனிக்கச் செய்யுங்கள். ஷூக்கள் நன்றாகப் பொருந்துவதை உறுதி செய்ய அவற்றை தொழில்முறையாளரைக் கொண்டு பொருந்தச் செய்யுங்கள். இயன்ற அளவுக்கு விரைவாக ஆரோக்கிய கவனிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவரை சந்தியுங்கள்.
    • என் பாதங்கள் சிவந்திருந்தால் என்ன செய்வது? 
       பாதத்தின் நிறத்தில் ஏற்படும் திடீர் மாற்றம், பாத ஆரோக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளில் ஏதோ ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம். அது இரத்த ஓட்ட மாற்றத்தின், தொற்றின், பாதத்தில் உள்ள எலும்புப் பிரச்சினைகளின் அல்லது வேறேதும் ஆரோக்கியப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
      சில நேரங்களில், பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைப் பொருட்கள் படுவது பாதத்தை சிவப்பாக்கக் கூடும். இயலுமானால், இவ்வாறு விளைவேற்படுத்துகிற பொருள் எது என்று கண்டறியுங்கள், எதிர்காலத்தில் அவற்றை நீங்கள் தவிர்க்கலாம்.
      பாதத்தின் பக்கப் பகுதிகளில் மட்டும் சிவந்திருத்தல், உங்கள் ஷூக்கள் மிகவும் இறுக்கமாக உள்ளதைக் காட்டலாம். லேஸ், வெல்க்ரோ அல்லது பக்கிள் போன்றவை கொண்ட ஷூக்களை அணியுங்கள், பகல் நேரத்தில் உங்கள் பாதம் விரிவடைவதற்கேற்ப நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உங்கள் ஷூக்களின் அளவை சரிபாருங்கள், உள்ளே ஏதும் அடைத்திருக்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
    • என் பாதத்தில் காய்ப்பு இருந்தால் என்ன செய்வது? 
      காய்ப்பு (கால்லஸ்)என்பது, அழுத்தத்திலிருந்து தோல் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் வழியாகும். மற்றொரு கால்லஸ் உருவாவதைத் தடுக்க, ஏற்கெனவே உருவான கால்லஸின் காரணத்தைக் கண்டறிவது அவசியம். கால்லஸை மென்மைப்படுத்த பாதத்துக்கான மாய்ஸ்ச்சரைசர் தடவவும், மென்மையான அரம் அல்லது பூமிஸ் கல்லைக் கொண்டு கெட்டிப்பட்ட தோலை அகற்றவும். கால் ஆணி அகற்றும் பிளாஸ்டர்களை தவிர்க்கவும், பிளேடு அல்லது கத்தரி கொண்டு கால்லஸை வெட்டி நீக்க ஒருபோதும் முயற்சி செய்யக்கூடாது. உங்களுக்கு நரம்புச் சேதமோ அல்லது பாதத்தில் உணர்ச்சி இழப்போ இருந்தால், நீங்களாகவே கால்லஸை நீக்க முயற்சி செய்யாதீர்கள். காயம்பட்ட காலினால் நடப்பதைத் தவிர்த்திடுங்கள், இயன்ற அளவுக்கு விரைவாக ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர் ஒருவரை சந்தியுங்கள்.
    • என் பாதத்தில் வெடிப்புக் கண்டிருந்தால் என்ன செய்வது? 
       தோலில் வெடிப்பு ஏற்படுவதற்கு பெரும்பாலும் வறட்சியும் காய்ப்புகளும்தான் காரணம். அவை மிகவும் வலி தரக்கூடியதாகவும், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இன்னும் கடுமையான பிரச்சினைகளுக்கும் இட்டுச் செல்லலாம்.
      உங்கள் பாதங்களைக் கழுவி, இதமாகவும் நன்றாகவும் உலர்த்துங்கள். வெடிப்புகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். வெடிப்புக்கண்ட பகுதியை சுத்தப்படுத்த பெடாடைன் போன்ற ஆன்ட்டிசெப்டிக் களிம்பையும் சலைனையும் (உப்புநீர்)பயன்படுத்தலாம். வெடிப்புக்கண்ட பகுதி அழுக்கடையாமலும் தொற்று ஏற்படாமலும் தடுக்க பேண்டேஜ் பயன்படுத்தி மூடி வையுங்கள்.
      உங்கள் காயம்பட்ட காலினால் நடப்பதைத் தவிர்த்திடுங்கள், இயன்ற அளவுக்கு விரைவாக ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர் ஒருவரை சந்தியுங்கள்.
    • என் பாதத்தில் கொப்புளம் இருந்தால் என்ன செய்வது? 
      உங்கள் காயம்பட்ட காலினால் நடப்பதைத் தவிர்த்திடுங்கள், இயன்ற அளவுக்கு விரைவாக ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர் ஒருவரை சந்தியுங்கள். கொப்புளத்தைப் பிதுக்கி எடுக்க முயலாதீர்கள், மேலும் கடுமையான பிரச்சினைகள் உருவாவதைத் தடுக்க கொப்புளம் ஏன் ஏற்பட்டது என்ற காரணத்தைக் கண்டறிவது முக்கியம் என்பதை நினைவில் வையுங்கள். கொப்புளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவும், பேண்டேஜ் அல்லது அதுபோன்ற பட்டியால் மூடி பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
    • பாதத்தில் ஏதேனும் குத்தி விட்டால் என்ன செய்வது? 
      உங்கள் அவசரகால பாத கவனிப்பு கிளினிக் அல்லது ஏதேனுமொரு மருத்துவரின் கிளினிக்கில் உடனே உதவி பெறுங்கள். வெளிப் பொருள் உங்கள் பாதத்தில் இருப்பதை புறக்கணிப்பது அல்லது அப்படியே விடுவது, பெரிய புண்ணாவது, தொற்று ஏற்படுவது, ஒருவேளை உறுப்பு நீக்கம் போன்ற கடும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லலாம். உங்கள் காயம்பட்ட காலினால் நடப்பதைத் தவிர்த்திடுங்கள், இயன்ற அளவுக்கு விரைவாக ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர் ஒருவரை சந்தியுங்கள்.
    • என் பாதத்தின் வடிவம் மாறினால் என்ன செய்வது? 
      தமது ஷூக்களை தொழில்முறையாளர்களைக் கொண்டு பொருந்துமாறு செய்து, புதிய வடிவத்திற்கேற்ப பொருத்திக்கொள்வது குறிப்பாக பாதத்தின் வடிவம் மாறுகின்றவர்களுக்கு முக்கியமானது. பாதத்தின் வடிவம் மாறுகிறது, கொஞ்சம் வீக்கம் இருக்கிறது மற்றும் பாதம் இளம்சூடாக இருக்கிறது என்று நீங்கள் கவனித்தால், மேலும் சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுக்க உங்கள் ஆரோக்கிய கவனிப்பு ஊழியரை உடனே சந்தியுங்கள். “சார்கோட் ஃபுட்”(“Charcot foot”) என்னும் நிலைமை இருக்கலாம், விரைவிலேயே சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இதனால் பாதத்தில் நிரந்தர வடிவ மாற்றம் ஏற்படலாம்.
    • என் பாதத்தில் வலி இருந்தால் என்ன செய்வது? 
       உங்கள் பாதத்தில் வலியை உணர்ந்தீர்கள் என்றால், சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க இயன்ற அளவுக்கு விரைவாக உதவி பெறுங்கள்.
      பல காரணங்களில் ஏதேனும் ஒன்றினால் பாதத்தில் வலி ஏற்படலாம், ஒரு காயம் (உதாரணமாக மூட்டில் ஏற்பட்ட திடீர் சுளுக்கு)முதல் பாதத்தில் கடினமான கால்லஸ்கள் உருவாவது போன்ற நாள்பட்ட நிலைமைகள் வரை எதுவும் காரணமாக இருக்கலாம். வலியும் வேதனை, மந்த வலி, குத்து வலி, இசிவு, துடிப்பு உணர்வு என பலவகையாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கிய கவனிப்பு ஊழியரிடம் உங்கள் உணர்வுகளைக் கூறும்போது இயன்ற அளவுக்கு முழுமையாக விளக்கவும், வலி எதனால் ஏற்படுகிறது என ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர் முடிவு செய்ய அது உதவியாக இருக்கும்.
    • என் பாதத்தில் வெட்டோ அல்லது சிராய்ப்போ ஏற்பட்டால் என்ன செய்வது? 
      வெட்டுக்காயம் அல்லது சிராய்ப்பை இளம் சூடான நீரில் கழுவித் துடைத்து, பேண்டேஜ் கொண்டு அதை மூடுங்கள். காயம்பட்ட காலினால் நடப்பதைத் தவிர்த்திடுங்கள், இயன்ற அளவுக்கு விரைவாக ஆரோக்கிய கவனிப்பு வல்லுநர் ஒருவரை சந்தியுங்கள்.
      Thanks. CAWC.net
    • also read - http://pettagum.blogspot.in/2011/03/blog-post_8455.html